மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன: டி.எஸ். ஹூடா
எல்லைத் தாண்டிச் சென்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடித் தாக்குதல்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்துக்கு முன்பும் நடந்துள்ளன என்று லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்: எல்லைத் தாண்டிச் சென்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடித் தாக்குதல்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்துக்கு முன்பும் நடந்துள்ளன என்று லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.எஸ். ஹூடா, 2016 ஆண்டு நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின் கதாநாயகன் என்று அழைக்கப்படுபவர்.
இவர் பேசுகையில், இதற்கு முன்பும் கூட எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய ராணுவத்தால் பல முறை அதிரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக பலரும் சொல்லியிருக்கிறார்கள். ராணுவத்தினரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது எப்போது, எந்த பகுதியில் நடந்தது என்பதற்கான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.
Advertisement
இதற்கு முன்பும் கூட இந்திய எல்லை முழுவதுமே அதிரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது மட்டும் தெரியும் என்று அவர் பேசியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் தொடங்கிய பிறகு, அதிரடித் தாக்குதல்கள் குறித்து பாஜக செய்யும் பிரசாரங்களின் போது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகே இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதற்கு முன்பு இதுபோன்றதொரு தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் பாஜகவின் கூற்று பொய்யானது என்றும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அதிரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வந்த நிலையில், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடாவின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.