முகப்பு
இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி 

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மரணத்தைத் தொடந்து 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..

Updated On : 13 மே, 2019 at 7:39 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:23 PM

பத்தேகர் சாஹிப்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மரணத்தைத் தொடந்து 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி, கடந்த 1984-ம் அன்று தில்லியில் உள்ள தனது வீட்டில் அவரது சீக்கிய பாதுகாவலர்களாலாயே படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் வன்முறை நிகழ்த்தப்பட்டது.  இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவினர் இந்த பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ‘அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்து போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

அவரது இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உட்பட பல்வேறு தலைவர்கள் அவரது கருத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம், பத்தேகர் சாஹிப் பகுதியில் திங்களன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

1984-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. இதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதை நான் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட கருத்தை கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நான் தெரிவித்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.