பிரபல செய்தித் தளத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்ற மோடியின் நெருங்கிய நண்பர்
பிரபல ஆங்கில செய்தித் தளத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்குகளை மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி வாபஸ் பெற்றுள்ளார்.
அகமதாபாத்: பிரபல ஆங்கில செய்தித் தளத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்குகளை மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி வாபஸ் பெற்றுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரபல அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி. இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராவார். இவரது குழும நிறுவனங்களான அதானி பவர் மஹாராஷ்டிரா லிமிட்டட் மற்றும் அதானி பெட்ரோ நெட் போர்ட் தகேஜ் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் , அதன் செயல்பாடுகளைப் பற்றி, பிரபல ஆங்கில செய்தித்தளமான 'தி வயர்' தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுரைகள் வெளிவந்தன.
இதனால் அந்த தளத்திற்கும் அதன் நிறுவன ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, மோனோபினா குப்தா , பமீலா பிலிப்போஸ் மற்றும் நூர் முஹம்மது ஆகியோருக்கு எதிராக, அகமதாபாத் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் அதானி குழுமத்தால் தொடரப்பட்டிருந்தன.
Advertisement
இந்நிலையில் தி வயர் ஆங்கில செய்தித் தளத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்குகளை மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி வாபஸ் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சித்தார்த் வரதராஜன், 'இதுதொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவதாகவும், அது நிறைவடைந்த பிறகு முழுமையான அறிக்கை வெளியிடுவதாகவும்' தெரிவித்தார்.