மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகச் சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கட்சித் தொண்டர்களின் அயராத முயற்சியால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரிடமும் அவர்கள் பாஜகவை கொண்டு சேர்த்துள்ளனர். கட்சிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட மிகப்பெரிய நாடு. நமது நாட்டில் தேர்தல் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் முடிந்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். மிக உயர்ந்த நமது தேசத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.