சபரிமலை கோவிலுக்குச் செல்ல முற்பட்ட கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளம் மட்டுமில்லாது நாடு முழுவதுமே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதன் தொடர்ச்சியாக, பெண்கள் பலர் சபரிமலை கோவிலுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு செல்லும் பெண்களும் அங்குள்ள காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று கோவிலுக்கு செல்ல முயன்ற 12 வயது சிறுமி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தந்தையுடன் வந்த சிறுமியை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சிறுமியின் தந்தை மட்டும் தரிசனம் செய்தார்.
இதுதவிர, சபரிமலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்னை காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்பட்டன, அதே நேரத்தில் கேரள அரசுப் பேருந்துகளில் பம்பை வரை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் வாகனங்களும் பம்பை வரை செல்ல அனுமதி அளித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.