மகாராஷ்டிராவில் அரசமைத்தது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அரசமைத்தது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
புது தில்லி: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அரசமைத்தது தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக அரசமைத்தது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வலியுறுத்திய நிலையில், பாஜக அரசுக்கு மகாராஷ்டிர ஆளுநர் 14 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளார். எனவே, இன்றோ நாளையோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது, ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், முதல்வர் பட்னவிஸ் தரப்பிலும், பாஜக தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞர்கள் கடுமையான வாதங்களை முன் வைத்தனர்.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதே தவறு, இது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம் என்றும் வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைத்தனர்.
அதே சமயம், அவசர அவசரமாக பொறுப்பேற்றுக் கொண்ட பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் கோருவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாகக் கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.