'மதநல்லிணக்கத்தை பரப்ப விரும்புகிறேன்' - மசூதி கட்ட நிலத்தை தானமாக வழங்கிய சீக்கியர்!
முசாபர்நகரில் மசூதி கட்டுவதற்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
இந்தியா'மதநல்லிணக்கத்தை பரப்ப விரும்புகிறேன்' - மசூதி கட்ட நிலத்தை தானமாக வழங்கிய சீக்கியர்!
முசாபர்நகரில் மசூதி கட்டுவதற்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
முசாபர்நகரில் மசூதி கட்டுவதற்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குருநானக் ஜெயந்தியின் போது இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நானா சாஹிப் குருத்வாராவுக்கு எளிதாக செல்லும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை புதிய சாலை வழித்தடம் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு குருநானக் தேவின் 550வது பிறந்த நாளை முன்னிட்டு முசாபர்நகர் மாவட்டத்தில் புர்காசியில் உள்ள ஒரு மசூதிக்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது பெயர் சுக்பால் சிங் பேடி (70). இவர் ஒரு சமூக ஆர்வலர். குருநானக்கின் போதனைகளுக்கு ஏற்ப அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை மக்களிடையே பரப்ப விரும்புவதாக கூறிய அவர், தனக்கு சொந்தமான 900 சதுர அடி நிலப்பரப்புக்கான ஆவணங்களை அந்நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகியிடம் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சுக்பால் சிங்கின் இந்த முயற்சியை சீக்கிய மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். புர்காசி பகுதி முஸ்லீம் மதத்தினர் அதிகம் இருக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.