ரஷ்யா செல்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நாடாளுமன்ற உறவுகளை மேம்படுத்துவதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரும்
புதுதில்ல்லி: இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நாடாளுமன்ற உறவுகளை மேம்படுத்துவதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரும் நவம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நாடாடுமன்ற உறவை மேம்படுத்துவதற்கான பொதுவான உறுதிமொழி அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் ரஷ்ய சபாநாயகர் வயச்செஸ்லாவ் வோலோடின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விளாடிவோஸ்டோக்கில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், நாடாடுமன்ற உறவுகள் குறித்த முக்கியத்துவம் மேலும் சிறப்பிக்கப்பட்டது.
Advertisement
இரு தரப்பினரும் தங்கள் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான தீவிர ஒத்துழைப்பை வரவேற்றனர். மேலும் இருதரப்பு உறவுகளின் மதிப்புமிக்க அங்கமாக நாடாளுமன்றத் தொடர்புகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவின் டுமா மாநில தலைவர் இந்தியா வருகை தந்ததை அடுத்து, இந்திய சபாநாயகர் 2019 இல் ரஷ்யா வருவதை எதிர்நோக்கியுள்ளோம் என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருநாட்டின் நாடாளுமன்ற உறவுகளை மேம்படுத்துவதால், பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் பொதுமக்கள் அளவிலான ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும் என இரு நாடுகளின் தலைமை மற்றும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இருநாட்டு நாடாளுமன்ற உறவுகள் மேம்பாடு குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடுத்த மாதம் (நவம்பர் 2019) ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.