அசாம் மாநில முதல்வரின் தொகுதியான மஜூலியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியுடன் குதிரை வண்டியில் 8 கிமீ தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவாலின் தொகுதி மஜூலி. பெக்கெலி சப்போரி என்ற நதி தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதையடுத்து, அவர் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்திற்கு அவர் குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும், படகு மூலமாக அங்குள்ள நதியைக் கடந்து கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அவரது உறவினர்கள்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, 'நாங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எங்கள் பகுதிகளில் சாலைகள் இல்லாததால் பெரும்பாலாக ஆம்புலன்ஸ்கள் ஊருக்குள் வருவதில்லை. இங்குள்ள முக்கிய சாலைகளை இணைக்க வேண்டும் என்று நாங்கள் முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குதிரை வண்டி அல்லது கை வண்டியைப் பயன்படுத்திதான் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஒரு ஆற்றையும் கடக்க வேண்டும். சாலைகள் சீர் செய்யப்படாததால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
கடந்த ஆண்டு, மஜூலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக இதேபோன்று குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டு தாமதமானதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.