எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.
எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இத்தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.