பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களும், சலுகைகளும் தற்காலிக நிவாரணமே அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக ஏற்கெனவே சில அறிவிப்புகளையும், சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்தபோதிலும், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதுபோல், தற்போதைய அறிவிப்புகளாலும் எந்தப் பலனும் கிடைக்காது.
பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்கான வழிமுறைகள் எதுவும் தெரியாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருக்கிறார். அவருக்கு நாட்டின் பொருளாதாரம் குறித்து சரியான புரிதல் இல்லை. நிலைமையின் தீவிரத்தை உணராமல் அரசு பிடிவாதப்போக்குடன் செயல்படுகிறது.
தற்போதைய அறிவிப்புகளும் தற்காலிக நிவாரணத்தையே அளிக்கும். பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு விரிவான திட்டமிடல் தேவைப்படுகிறது என்றார் அவர்.
ஏற்றுமதி, வீட்டு வசதித் துறை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, ரூ.70,000 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து மேற்கண்ட கருத்தை ஆனந்த் சர்மா கூறினார்.