உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் உள்ள வீட்டில் பட்டாசுப்பொருள்கள் வெடித்ததில் சிறுமிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் சுக்லால் பாரதி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
எட்டா மாவட்டத்தின் தாகியா பகுதியில் வசித்து வந்தவர் முன்னி தேவி (35). அவரும், அவருடைய அண்டை வீட்டாரும் இணைந்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த பட்டாசுப்பொருள்கள் சனிக்கிழமை காலை வெடித்ததில், அவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், முன்னி தேவியின் மகள்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்
டுள்ளனர்.
முன்னி தேவி சமைத்து கொண்டிருக்கையில், அடுப்பின் நெருப்பு அருகில் இருந்த பட்டாசு மீது பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்த பட்டாசுத் தொழிற்சாலை முறையான உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, "இந்தத் தொழிலை அவர்கள் சட்டவிரோதமாக நடத்தவில்லை. கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். பட்டாசு கிடங்கையும் நாங்கள் ஆய்வு செய்தோம். வீட்டினுள் பட்டாசுப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார் அவர்.