வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மித மிஞ்சிய மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைகளில் அதன் வரத்து குறைந்துவிட்டது.
இதன் காரணமாக, தேசிய தலைநகர் தில்லி உள்பட சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70-80-ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.
உள்நாட்டு சந்தைகளில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு கடந்த சில வாரங்களாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில்லறை விற்பனையில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இதனிடையே, மத்திய அரசிடம் போதுமான அளவு வெங்காயம் இருப்பு உள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெங்காயத் தட்டுப்பாட்டை குறைக்க அனைத்து வகையான வெங்காய வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.