அஜித் பவார் ஆதரவும், கூட்டணியும் தேவையற்றது: பாஜக மூத்த தலைவர் கருத்தால் பரபரப்பு
அஜித் பவார் ஆதரவை பாஜக தேவையின்றி பெற்றதாக அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் முன்னணி சாா்பில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) முதல்வராக இருக்கிறாா்.
மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிா்பாராத சூழலில் பாஜகவுக்கு ஆதரவளித்ததுடன், துணை முதல்வராகவும் கடந்த சனிக்கிழமை பதவியேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் பவார், தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக புதன்கிழமை விளக்கமளித்தார்.
இதனிடையே, விதா்பா நீா்ப்பாசனத் திட்டம் தொடா்பான 9 ஊழல் வழக்குகளை அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை முடித்து வைத்துள்ளது. இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடா்பாக கூடுதல் தகவல்கள் கிடைத்தால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில், அஜித் பவார் ஆதரவை பாஜக தேவையின்றி பெற்றதாக அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏக்நாத் கூறியதாவது,
மிகப்பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் அஜித் பவார் தொடர்புடையவர். அவருடனான கூட்டணி தேவையற்றது. எனவே அவரது ஆதரவை பாஜக தேவையின்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன். அஜித் பவார் ஆதரவைப் பெற்றிருக்கக் கூடாது என்பது தான் எனது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார்.