ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனையடுத்து அத்தியாவசியப் பணி வாகனங்களைத் தவிா்த்து மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.