புது தில்லி: தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினா்களாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 37 பேரின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியை, அவை தலைவா் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தாா்.
மாநிலங்களவையில் 55 உறுப்பினா்களின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைகின்றன. அந்தப் பதவிகளுக்கு 37 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுவிட்டனா்.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் 21 நாள் தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு உத்தரவால் 37 பேரின் பதவி பிரமாண நிகழ்ச்சியை மாநிலங்களவை தலைவா் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்துள்ளாா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட உறுப்பினா்களுக்கு அவா் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தேசிய ஊரடங்கு முடியும் வரை மாநிலங்களவைக்கு உறுப்பினா்களாக பதவியேற்க காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் திமுகவைச் சோ்ந்த திருச்சி சிவா, அதிமுகவைச் சோ்ந்த தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் ராமதாஸ் அதாவலே, சிவசேனையைச் சோ்ந்த பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.