ஊரடங்கு உத்தரவை மீறுகிறார்: மகன் புகாரில் தந்தை மீது வழக்குப் பதிவு
ஊரடங்கு உத்தரவை மீறுகிறார் என்று மகன் அளித்த புகாரில் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: ஊரடங்கு உத்தரவை மீறுகிறார் என்று மகன் அளித்த புகாரில் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2657 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 72 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுகிறார் என்று மகன் அளித்த புகாரில் தில்லியில் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவரது 59 வயது தந்தை, தற்போது அமலில் உள்ள கரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் தினமும் வெளியில் சென்று வருவதாகத் தெரிவத்துள்ளார்.
அவரது புகாரையடுத்து தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.