அரசியல், மதம் இல்லாமல் வாழ இந்தியா கற்றுக் கொண்டது: விஞ்ஞானி
அரசியலும், மதமும் இல்லாமல் வாழ இந்தியா கற்றுக் கொண்டது என்று புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: அரசியலும், மதமும் இல்லாமல் வாழ இந்தியா கற்றுக் கொண்டது என்று புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றை ஒழிக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது பற்றி கருத்துக் கூறியிருக்கும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இது மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இதே நடைமுறை, ஒவ்வொரு தேர்தலும் முடிந்த பிறகும் வர வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டைக் கட்டமைப்பதில் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும்.
பொதுவாக பூமியில் இதுபோன்ற எண்ணற்ற கிருமிகள் செயலற்ற நிலையில் இருந்து கொண்டேதான் இருக்கும். அவைகளுக்கு சாதகமான நிலை ஏற்படும் போது உயிர்பெற்று பல்கிப் பெருகும். கடந்த மூன்று நூற்றாண்டுகள் அல்லது அதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஏதேனும் ஒரு தொற்று இப்படி பல்கிப் பெருகி வருகிறது. இது இயற்கையின் நியதி என்று கூறியுள்ளார்.
இந்திய மக்கள் அனைவரும் அவர்களது மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ளனர். இதே நிலைப்பாட்டைத்தான் மக்கள் நாட்டை கட்டமைப்பதிலும் செயல்படுத்த வேண்டும் என்றும் மாதவன் நாயர் வலியுறுத்தியுள்ளார்.