கான்பூர்: நாடெங்கும் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில், நூறு ரூபாய்க்கு குறைவாக கரோனா பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் முறையை கான்பூர் ஐஐடி கண்டுபிடித்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 6771 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 228 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தடுப்புப் பணிகளில் முன்னணியில் நின்று செயல்படும் மருத்துவதுறையினர் உள்ளிட்டோருக்கு ‘பிபிஈ’ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் போதிய அளவில் இல்லை என்பது குறித்து பெருமளவில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் நூறு ரூபாய்க்கு குறைவாக கரோனா பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் முறையை கான்பூர் ஐஐடி கண்டுபிடித்துள்ளது.
கான்பூர் ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து அக்குழுவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் நிதின் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனாவின் பரவல் கடுமையாக அதிகரித்துக் காணப்படும் வேளையில், அதை எதிர்த்து ஆபத்தான சூழ்நிலையில் போராடி வருபவர்களுக்கு, தனிநபர் பாதுகாப்பு கவச உடைகளுக்கான தேவையும் அதிகரித்துக் காணப்படுகிறது. வழக்கமான அத்தகைய உடைகள் விலை அதிகமுள்ளதாக இருக்கும் சூழலில் அதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
எனவேதான் நாங்கள் கேரிபேக்குகளைத் தயாரிக்க உதவும், நீர் புகாத தன்மை கொண்ட பாலிதீன் உருளைகள் மூலமாக இந்த உடைகளைத் தயாரித்துள்ளோம். இதற்கு நாங்கள் ‘பைப்ஸ்’ என்று பெயரிட்டுள்ளோம். இதன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு செயல்முறை வெளிப்படையானது.
எனவே சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் விரைவிலேயே இதனை அதிக அளவில் தயாரிக்கலாம். இதன் காரணமாக இதன் விலையானது ஒரு ஆடைக்கு நூறு ரூபாய்க்கும் குறைவாகதான் ஆகும்.
வழக்கமான தனிநபர் பாதுகாப்பு கவச உடை போன்ற வடிவமைப்பும் வசதியும் இல்லாவிட்டாலும், இது முழுமையான பாதுகாப்பைத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.