இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 716 ஆக உள்ளது.
இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவரது தேவைகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டோரிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவல்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில், 20 சதவீதத்தினருக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமாக இருப்பதால், தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.