அழு, எனதருமை நாடே! : ப. சிதம்பரம் வேதனை ட்வீட்
அழு, எனதருமை நாடே என்று கரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
புது தில்லி: அழு, எனதருமை நாடே என்று கரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 10,541 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 358 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்நிலையில் அழு, எனதருமை நாடே என்று கரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முன்னாள் மத்தியஅமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஊரடங்கு நாட்களில் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பணம் இருக்கிறது; உணவு இருக்கிறது; ஆனால் அரசு இரண்டையுமே வழங்குவதில்லை. அழு, எனதருமை நாடே!
நிதியுதவி தொடர்பான முதல்வரின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கடந்த 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் ஒரு ரூபாய் கூட சேர்க்கப்படவில்லை.
பிரதமரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்தி நாமும் எதிரொலிக்கலாம். ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த முடிவை நாம் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.