விடியோ கால், லொகேஷன் ஷேரிங்.. பிணையில் விடுதலையாகும் கைதிகளுக்கு நிபந்தனை
கூகுள் மேப் வழியாக இருப்பிடத்தை பகிர்வதும், எங்கே இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய விடியோ கால் செய்வதும் பிணை கேட்கும் கைதிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது
புது தில்லி: கூகுள் மேப் வழியாக இருப்பிடத்தை பகிர்வதும், எங்கே இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய விடியோ கால் செய்வதும் பிணை கேட்கும் கைதிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பிணையில் விடுதலையாகும் கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிய இருப்பிடத்தைதைப் பகிர்வதும் (லொகேஷன் ஷேரிங்), விடியோ கால் வசதியை மேற்கொள்வதும் நிபந்தனைகளாக விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று குற்றவாளிகளுக்கு நிபந்தனை பிணை அளித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காவல்துறை அதிகாரிக்கு கூகுள் மேப் மூலம் 'டிராப்-ய-பின்' வசதி மூலம் இருப்பிடத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முற்பகல் 11 மணி முதல் 11.30 மணிக்குள் காவல்துறையினருக்கு விடியோ கால் செய்து தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
பிணையில் விடுதலையாகும் போது, தங்களது செல்லிடப்பேசி எண்ணை காவல்துறை கண்காணிப்பாளருக்கு அளித்துவிட்டுச் செல்ல வேண்டும், அந்த எண் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும், அணைக்கப்படக் கூடாது என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.