உத்தரப் பிரதேசத்தின், பகோனா கிராமத்தில் சாதுக்கள் இருவர் மர்மமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலந்த்ஷஹர் மாவட்டத்தின், பகோனா கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குள் சாதுக்கள் இருவர் மர்ம முறையில் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் மக்கள் கோவிலுக்கு வந்தபோது ரத்த வெள்ளத்திலிருந்த சாதுக்களின் உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்தவர்கள் ஜகன்தாஸ் (55) மற்றும் சிவதாஸ் (35) என அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கொலை தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், அதே கிராமத்தில் வசிக்கும் முராரி என்ற இளைஞர், கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நிர்வாண நிலையிலிருந்தால், அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் சாதுக்களிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைத் திருடியதற்காக, இளைஞரைத் திட்டிய குற்றத்திற்காகக் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அவரிடம் ஒரு கத்தியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பதற்றம் அதிகரித்து, கோயிலுக்கு அருகே மக்கள் அதிக அளவில் கூடத் தொடங்கியுள்ளனர். சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தலைமைக் காவலர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.