அமெரிக்காவில் பெற்றோர்; ஹைதராபாத்தில் குழந்தையுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய காவல்துறை
ஹைதராபாத்தில் இருக்கும் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத நிலையில், அதன் பெற்றோர் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ள,
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருக்கும் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத நிலையில், அதன் பெற்றோர் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ள, அவர்களது மனக்கவலையைப் போக்கும் வகையில், காவல்துறையினர் குழந்தையின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவில் பெற்றோர் இருக்கும் நிலையில், அவர்களது ஒரு வயது குழந்தை ஹைதராபாத்தில் உறவினர்களிடம் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால், குழந்தையின் பிறந்தநாளுக்குக் கூட, பெற்றோரால் இந்தியா வர முடியாமல் போன நிலையில் அவர்களது சிறப்பு வேண்டுகோளை ஏற்று, ஹைதராபாத் காவல்துறை, பெற்றோரின் கவலையை தீர்த்துள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வரும் ஒரு வயது குழந்தையின் பெற்றோர், ஹைதராபாத் காவல்துறையை தொடர்பு கொண்டு தங்கள் நிலையை விளக்கினர்.
Advertisement
கரோனா தொற்றால் ஊரடங்கை அமல்படுத்துவதில் கடும் சிரமங்களை சந்தித்து வரும் ஹைதராபாத் காவல்துறை, செவ்வாய்கிழமையன்று ஹைதராபாத்தின் பர்காத்புரா பகுதிக்குச் சென்றனர். அங்கு சந்தீப் - ஹரிணியின் ஒரு வயது மகள் மைராவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறை ஆய்வாளர், காவல் வாகன ஓட்டுநர் என ஒரு சில காவலர்கள், மைராவின் இல்லத்துக்குச் சென்று, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றது, அவர்களது உறவினர்களுக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் பிறந்தநாளன்று, குழந்தையின் பெற்றோர் உடன் இல்லையே என்ற வருத்தம் உறவினருக்கும், பெற்றோருக்கும் நீங்கியது.
காக்கும் பணியை மட்டும் செய்யாமல், ஊரடங்கு காலத்தில் மனதளவில் பாதிக்கப்படும் மக்களுக்கும் காவலர்கள் தங்களால் இயன்றதை செய்து, தன்னார்வலர்களாகவும் வலம் வருகிறார்கள்.