அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை: ஏற்பாடுகள் முனைப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, ராமா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, ராமா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணி புதன்கிழமை பூமி பூஜையுடன் தொடங்குகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். அத்துடன் 200 முக்கிய நபா்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பயன்படுத்த நாட்டின் பல்வேறு ஆன்மிகச் சிறப்புள்ள பகுதிகளில் இருந்து புனித மண்ணும், புனித நீரும் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பூமி பூஜை நடைபெறும் மேடையில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் இடம்பெறுவார்கள். இந்த நிகழ்வில் சுமார் 135 தீட்சிதர்கள் மற்றும் ஆன்மிகக் குருக்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி நாளை சிறப்பு விமானம் மூலம் தில்லியில் இருந்து லக்னௌ சென்று அங்கிருந்து அயோத்தியாவுக்கு செல்கிறார். அங்கு ஹனுமன்கர்ஹி கோயிலுக்குச் சென்றுவிட்டு ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார்.
பூமி பூஜையில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கற்களைப் பயன்படுத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் முக்கிய பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கி தொடர்து நடைபெற்று வருகிறது.
கரோனா பேரிடர் காலம் என்பதால், அழைப்பு விடுக்கப்பட்டவா்கள் மட்டுமே பூமி பூஜையில் பங்கேற்க முடியும் என்றும் அழைப்பில்லாதவா்கள் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டு கால போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர் மாதம் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் அமைய உள்ளது.
அயோத்தியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் வீட்டில் இருந்தே காணும் வகையில் தூர்தர்ஷன் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோவிலுக்கான பூமி பூஜை விழாவை நேரலையாக எல்இடி திரைகள் மூலம் தில்லியில் ஒளிபரப்புச் செய்வதற்கு பாஜக திட்டமிட்டு வருகிறது.
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.