‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை
‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகளிடையே உருவான பயணத் தடைகளின் காரணமாக, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் மீட்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டம் மே மாத துவக்கத்தில் மத்திய வெளியுறவுத் துறையினால் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் வியாழனன்று நடைபெற்ற வாரந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக நாடு திரும்பியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். இதன்காரணனமாக இந்தியர்களை மீட்கும் மிகப் பெரிய திட்டமாக இது நடந்து வருகிறது. நாம் இப்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று துவங்கப்பட்ட ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறோம்.
எங்களுக்கு நமது தூதரகங்களில் இருந்து கிடைத்துள்ள கணக்கீடுகளின்படி,மேலும் 60 விமானப் பயணங்களுக்கு திட்டமிட்டுளோம். இதன்மூலம் இந்த திட்டத்தில் இந்த மாதத்தில் மேற்கொள்ள உள்ள பயணங்களின் எண்ணிக்கை 746 ஆக உயர்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.