இடுக்கியில் கன மழை: ஏலக்காய் தோட்டங்கள் சேதம்
இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், செடிகள் முறிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், செடிகள் முறிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் ஆகிய வட்டாரங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளே அதிகளவில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், சூறைக் காற்றில் சிக்கி செடிகள் உடைந்தும் சேதமடைந்துள்ளன.
தற்போது ஏலக்காய் தோட்டங்களில் அறுவடை பருவம் தொடங்கியுள்ள நிலையில், செடிகள் முறிந்து மண்ணில் புதைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் கட்டுப்பாடுகளால் ஏலக்காய் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிடவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.
சேத மதிப்பு: இடுக்கி மாவட்டத்தில் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.127.45 கோடி மதிப்பில் ஏலக்காய் பயிர்களும், 233.8 ஹெக்டேர் பரப்பளவில் 8.21 கோடி மதிப்பில் மிளகு கொடிகளும், 4 லட்சம் வாழை மரங்கள் மற்றும் 981 தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளது என்றும், 17,320 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.