முகப்பு
இந்தியா

சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு செல்லப்பட்ட கரோனா நோயாளியின் உடல்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், கரோனா நோயாளியின் உடலை இடுகாட்டுக்கு சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு செல்லப்பட்ட அவலம் நடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், கரோனா நோயாளியின் உடலை இடுகாட்டுக்கு சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு செல்லப்பட்ட அவலம் நடந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதேப்போன்ற சம்பவத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் பபட்லா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை, அவ்வழியாகச் சென்றவர் விடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பபட்லா பகுதி காவல்துறை ஆய்வாளர் அஷோக் கூறுகையில், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக 68 வயது முதியவர் நேற்று காலை பபட்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் மீண்டும் பபட்லா அரசு மருத்துவமனைக்கே அவரது உடலை கொண்டு வந்தனர். அங்கு அவரது உடலுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல், பபட்லாவிலேயே இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தார் முடிவு செய்தனர்.

அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், சைக்கிள் ரிக்‏ஷாவிலேயே இடுகாட்டுக்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். 

இதனை அங்கிருந்த சிலர் விடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டதால், மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், உடலை சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு செல்வது என்ற முடிவை அந்த குடும்பத்தினரே எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் ஜேசிபியில் கரோனா நோயாளியின் உடலை எடுத்துச் சென்ற சம்பவமும், கரோனா பாதித்து உயிரிழந்த பெண்ணின் உடலை டிராக்டரில் கொண்டு சென்ற சம்பவமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →