குஜராத்தில் கனமழை: 13 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைப்பு
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 13 குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 13 குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 2 நாட்களில் 12 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 225 சாலைகளில் முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கனமழை மீட்பு பணிகள் குறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 13 குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
எந்த இக்கட்டான சூழலையும் கையாள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளதாக கூடுதல் தலைமை செயலர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆறுகளில் அதிக அளவிலான நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூரத் மாவட்டத்தில் அதிக அளவிலான மழை பொழிந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது வரை 70% மழை பெய்துள்ளது.