வாகன காப்பீட்டுக்கு கட்டாயமாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்
வாகன காப்பீட்டைப் புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாகன காப்பீட்டைப் புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வாகன காப்பீட்டை புதுப்பிக்கும் போது மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை இணைப்பது கட்டாயமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐ) நாட்டில் உள்ள காப்பீட்டு வழங்குநர்களுக்கு ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாகன காப்பீட்டு பாலிசியை புதுப்பிக்கும்போது வாகனத்திற்கான கட்டுப்பாட்டு (பி.யூ.சி) சான்றிதழின் கீழ் மாசுக்கட்டுபாட்டு உரிமத்தை இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
விபத்தின் போது வாகனத்தின் பி.யூ.சி சான்றிதழ் காலாவதியானால், காப்பீட்டு நிறுவனங்கள் எந்தவொரு சேதத்திற்கும் இழப்பீடு வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான உரிமைகோரல் இழப்பீடுகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு உரிமம் அவசியம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, காப்பீட்டுக் கொள்கையை புதுப்பித்த தேதியில் சரியான வாகன மாசுக்கட்டுப்பாடு உரிமம் இல்லாவிட்டால் ஒரு வாகனத்தை காப்பீடு செய்ய வேண்டாம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.