கேரள தலைமைச் செயலகத்தில் தீ: ஆதாரங்களை அழிக்க என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள தலைமைச் செயலகத்தின் பொது நிர்வாகத் துறையில் (அரசியல்) மாலை 4.30 மணியளவில் தீ ஏற்பட்டது.
இதுபற்றி ரமேஷ் சென்னிதலா தெரிவித்ததாவது:
"தீ விபத்து ஏற்பட்ட துறையின்கீழ் தான், வெளிநாட்டுப் பயணம் மற்றும் அரசியல் ஒப்புதல்கள் தொடர்பான கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அனைத்து சிசிடிவி காட்சிகளையும் என்ஐஏ கோரியிருப்பதை யாரும் மறக்கக் கூடாது. பினராயி விஜயனுக்கு தெரிந்தே அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கான சதிதான் இது" என்றார் சென்னிதலா.
பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் தெரிவிக்கையில், "தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்காகத்தான் இந்தத் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது." என்று குற்றம்சாட்டினார்.
தீ விபத்து பற்றி பொது நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் பி. ஹனி தெரிவித்ததாவது:
"அந்தத் துறையில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், வெறும் 2 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். கணிணியில் தீ ஏற்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம்தான் தீ ஏற்பட்டதற்குக் காரணம். கணிணிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சில பழைய கோப்புகள் நாசமடைந்தன. விருந்தினர் மாளிகையில் அறை பதிவு செய்வது தொடர்பான கோப்புகள்தான் சேதமடைந்துள்ளன. எந்தவொரு முக்கியக் கோப்புகளும் அழிக்கப்படவில்லை" என்றார் அவர்.