கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
கடன் தவணை (இஎம்ஐ) செலுத்த தளர்வு அறிவித்துவிட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புது தில்லி: கடன் தவணை (இஎம்ஐ) செலுத்த தளர்வு அறிவித்துவிட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வட்டி வசூல் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. வழக்கமாக கடன் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. வட்டிக்கு வட்டி என்பது ரிசர்வ் வங்கியின் முடிவு என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது.
வங்கிக் கடனை செலுத்த முடியாத பாதிப்பு, பொதுமக்களுக்கு ஏற்பட கரோனா காரணமாக மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உங்களது பணியை சரியாக செய்யும் நேரம் இதுவல்ல, பொதுமக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதுதான் முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.