கரோனா அச்சுறுத்தலுக்கிடையே நாளை பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம்
பஞ்சாபில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.
சண்டிகர்: பஞ்சாபில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.
பஞ்சாபில் 3 அமைச்சர்கள் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் என 23 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் குணமடைந்துள்ளனர். எனினும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பஞ்சாபில் மீண்டும் சட்டப்பேரவை அமர்வு நாளை நடைபெற உள்ளது. இது குறித்து சட்டப்பேரவை தலைவர் கே.பி.சிங் பேசியதாவது, ''சட்டப்பேரவைக்கு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கரோனா 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருக்க வேண்டும். முந்தைய சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆறு மாதங்களுக்குள் ஒரு அமர்வை நடத்தி முடிப்பது அரசியலமைப்பின் தேவை.
சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு மேசையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரண்டு பேர் அமர அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அதிகரிப்பால் தற்போது ஒருவர் அமர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் மேசைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
117 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 105 இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. எனினும் பல உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இருக்கையில் பற்றாக்குறைகள் ஏற்படாது.
பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்'' இவ்வாறு அவர் கூறினார்.