வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று தவறான நடவடிக்கை மேற்கொண்டதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.
"இந்த மசோதாக்களைக் குறித்து மத்திய அரசு யாருடனும் விவாதிக்கவில்லை. இதன் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சாலைகளில் உள்ளனர். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இந்த சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் சார்பில் குடியரசுத் தலைவருடன் பேச நேரம் கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "ஒரு ஜனநாயக நாட்டில் உரையாடல் என்பது எப்போதும் நடைபெற வேண்டும். அது நடந்தால் எதிர்ப்பு இருக்காது. மக்கள் வருத்தப்பட வேண்டியதில்லை" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து மத்திய அரசு உடனடியாக மூன்று புதிய விவசாய சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் விவசாயிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.