கேஜரிவால் இல்லம் முன்பு பாஜகவினர் தொடர் போராட்டம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள், மேயர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள், மேயர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாஜக எம்.பி.க்களான மனோஜ் திவாரி மற்றும் கெளதம் காம்பீர் ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு தில்லி மேயர்களான ஜெய்பிரகாஷ், அனாமிகா மிதிலேஷ், நிர்மல் ஜெயின் ஆகியோர், ஏராளமான பெண் கவுன்சிலர்களுடன் கேஜரிவால் இல்லத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நகராட்சி நிர்வாகத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.13,000 கோடியை விடுவிக்க வேண்டும், நகராட்சி நிர்வாக ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, முதல்வர் கேஜரிவால் தன்னை சாதாரண மனிதன் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால் அவர் சாதாரண மனிதனுக்கு எதிரானவர். அதனால் தான் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க உதவும் ரூ.13,000 கோடியை விடுவிக்காமல் உள்ளார் என்று கூறினார்.
முதல்வர் இதனை உணர்ந்தால் கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் வழியில் நிலுவைத் தொகையை உடனடியாக அறிவிப்பார் என்று தில்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா தெரிவித்தார்.