குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாநில அரசால் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாக்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் இந்த மசோதாக்கள் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு சக்தி சட்டம் என அழைக்கப்படும்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், “இது வரலாற்று முடிவு. இந்த சட்டம் எங்கள் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும்” எனத் தெரிவித்தார்.