மேற்குவங்கம் செல்ல அமித் ஷா திட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2-வது முறையாக மேற்குவங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2-வது முறையாக மேற்குவங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கடந்த மாதம் 5-ஆம் தேதி மேற்குவங்கத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் இரண்டு நாள்கள் பயணத்தை அமித் ஷா மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாள்களுக்கு அமித் ஷா மேற்குவங்கத்தில் பயணம் மேற்கொள்வார் என்று மாநில பாஜக அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாள்கள் பயணத்திலும், கட்சித் தொண்டர்களை சந்திப்பதுடன் மட்டுமல்லாமல், பொதுமக்களுடனும் உரையாற்றவுள்ளார். கடந்த முறை அமித் ஷா வருகையின்போது பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட உற்சாகம் இம்முறையும் ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துறைமுகப் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக பிரமுகர்களின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அமித் ஷா மீண்டும் மேற்குவங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.