விவசாயிகளுக்கு ஆதரவு: பஞ்சாபில் இளைஞர்கள் போராட்டம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஞ்சாபில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஞ்சாபில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவாசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையையும் நிராகரித்து, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்து தில்லி நோக்கி பயணம் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கான இளைஞர்கள் என்ற பெயரில் குழுவாக சேர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தில்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.