பொது வெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லைதமிழக அரசு அறிவிப்பு
கடற்கரைகள், சாலைகள் போன்ற பொது வெளிகளில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கடற்கரைகள், சாலைகள் போன்ற பொது வெளிகளில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு: வரும் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. இவற்றில் பொது மக்கள் அதிகளவில் பங்கேற்பாா்கள். அதுபோன்று வரும் புத்தாண்டை ஒட்டி, கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொது மக்கள் அதிகமான அளவில் கூட நேரலாம்.
இதன் காரணமாக, இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கரோனா நோய்த் தொற்றானது இப்போது மீண்டும் பரவி வரும் சூழலில் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் உள்ள உணவகங்கள் வழக்கம் போன்று செயல்படும்.
ஆனால், இந்த இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு நடத்தப்படும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. அனைத்து கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என்பதால் டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாள்களில் பொது மக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.