கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது
மும்பையில் உள்ள தனியார் விடுதியில் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கேளிக்கையில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சூசான் கான் உள்பட 34 பேரை
மும்பையில் உள்ள தனியார் விடுதியில் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கேளிக்கையில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சூசான் கான் உள்பட 34 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்று கரோனா விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்டதாக அந்த விடுதியில் அதிகாலை 3 மணிக்கு போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த விடுதியில் விதிமுறைகளை மீறி 13 பெண்கள், விடுதி பணியாளர்கள் 7 பேர் உள்பட 34 பேர் இரவு நேர கேளிக்கையில் பங்கேற்றது தெரியவந்தது. இவர்களில் 19 பேர் தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் பிரபலங்கள் ஆவர்.
இதையடுத்து அரசு உத்தரவை மீறி செயல்பட்டது, நோய்த் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஒன்று கூடியது என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சூசான் கான் (பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி) உள்பட 34 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பெண்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக வந்தபோது, படப்பிடிப்பு இரவு வரை நீடித்ததாகவும், பின்னர் விமானத்தில் தில்லிக்கு திரும்புவதற்கு முன்பாக நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று விடுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் நேரக் கட்டுப்பாடுகள் தெரியாததால் நிகழ்ந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் சுரேஷ் ரெய்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.