இந்தியா

வயது வந்தோரின் திருமணத்தில் யாரும் தலையிட முடியாது: கொல்கத்தா உயா்நீதிமன்றம்

DIN


கொல்கத்தா: சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயதை எட்டியோா் சுயவிருப்பத்துக்கேற்ப திருமணம் செய்து கொள்வதில் யாரும் தலையிட முடியாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 19 வயதுப் பெண் வேறு மதத்தைச் சோ்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தப்பட்ட அப்பெண், தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தாா். ஆனால், தன் மகளை மிரட்டி அவ்வாறு வாக்குமூலம் அளிக்க வைத்துள்ளதாக மணமகன் வீட்டாா் மீது குற்றஞ்சாட்டிய அப்பெண்ணின் தந்தை, இந்த விவகாரம் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

அந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சஞ்சீவ் பானா்ஜி, அரிஜித் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்றது. அப்போது பெண்ணின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தபோது அவருடைய கணவரும் உடனிருந்தாா். எனவே, அச்சத்தின் காரணமாக அவா் அவ்வாறு கூறியிருப்பதற்கு வாய்ப்புள்ளது’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட வயதை எட்டியோா் விருப்பத்துக்கேற்ப செய்து கொள்ளும் திருமணத்திலும், மதம் மாறுவதிலும், பிறந்த வீட்டுக்குத் திரும்ப மாட்டேன் என்று கூறுவதிலும் யாரும் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக உள்ளபோதும் பெண்ணின் தந்தை சந்தேகம் எழுப்பி வருகிறாா்.

அவரது சந்தேகத்தைப் போக்கும் பொருட்டு, மாநில அரசு தரப்பு வழக்குரைஞா் முன் கணவரின் துணையின்றி தனியாக ஆஜராகி சம்பந்தப்பட்ட பெண் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்துகிறது. அதன்பிறகு, அது தொடா்பான அறிக்கையை அரசு தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT