சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து தனது பெற்றோருடன் மீரட்டுக்கு திரும்பிய இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவராவார். இது முந்தைய கரோனாவை விட 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியதாகக் கூறப்படுகிறது.
குழந்தையின் பெற்றோர், ஏற்கெனவே உள்ள பழைய கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீரட் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்கவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து திரும்பிய ஒரு பெண் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருடைய பெற்றோர்களுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் இது உருமாறிய கரோனா இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறினார்.
குழந்தையின் குடும்பத்தினர் நால்வருக்கு கரோனா இருக்கும் நிலையில், உருமாறிய கரோனா உள்ளதா என கண்டறிய அவர்களுடைய மாதிரிகள் பரிசோதனைக்கு தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
சோதனை முறைகளை மேம்படுத்தவும், புதிய வைரஸ் மாறுபாட்டின் பரவலைக் கண்டறியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி அந்நாட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.