ஹைதராபாத்: பெகும்பெட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பனீர் தொக்கு சாப்பிட்ட இரண்டு வயது சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெற்றோருடன் ஹோட்டலுக்குச் சென்ற சிறுவன், ரொட்டி மற்றும் பனீர் தொக்கு சாப்பிட்டுள்ளான். சிறிது நேரத்தில் அவனுக்கு உணவு விஷமானதற்கான அறிகுறிகள் தென்பட்டு உயிரிழந்தான். இது குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பெங்களூருவில் மென்பொறியாளராக இருக்கும் ரவி நாராயணா, தனது மனைவி மற்றும் மகன் விஹானுடன் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க ஹைதராபாத் வந்துள்ளார்.
இரவு நேரத்தில் தனியார் ஹோட்டலில் ரோட்டி மற்றும் பனீர் தொக்கு வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், ரவிக்கும், ரோஹனுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாராயணா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஹோட்டல் அறையில் மகன் விஹான் மயக்கமடைந்துவிட்டதாக மனைவி தொலைபேசி மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்.
உடனடியாக விஹான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஹான் உயிரிழந்தார்.
இது குறித்து மர்ம மரணம் என்ற வகையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹோட்டலில் இருந்தும் உணவுப் பொருட்கள் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.