குஜராத் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (திங்கள்கிழமை) இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (திங்கள்கிழமை) இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.
டிரம்ப் பயணத் திட்டம்:
- இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் அகமதாபாத்திற்கு வருகிறார். இந்தியப் பயணத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார் டிரம்ப். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் சபர்மதி ஆசிரமம் செல்கிறார்.
- இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.05 மணிக்கு மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ள நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், அங்கு சுமார் 1,00,000 மக்களுக்கு முன்பு உரையாற்றுகிறார்.
- இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு மாலை 5.15 மணியளவில் இருவரும் தாஜ் மஹாலுக்குச் செல்கின்றனர்.
- ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் தில்லி திரும்புகிறார் டிரம்ப்.
- இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அரசு முறை சம்பிரதாயங்களுடன் வரவேற்பும் முப்படைகளின் ராணுவ மரியாதையும் அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்படுகிறது.
- பின்னர் காந்தி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் டிரம்ப், ஹைதராபாத் இல்லத்துக்கு வருகிறார்.
- செவ்வாய்கிழமை பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
- இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்படவுள்ளன.
- இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய் இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை டிரம்ப் சந்திக்கிறார்.
- இதையடுத்து, செவ்வாய் இரவு சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்புகிறார் டிரம்ப்.