முகப்பு
இந்தியா

தில்லியில் சிஏஏ போராட்டத்தில் வன்முறை; தலைமைக் காவலர் பலி: 144 தடை உத்தரவு

வடகிழக்கு தில்லிப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 24 பிப்ரவரி, 2020 at 4:31 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:28 PM


புது தில்லி: வடகிழக்கு தில்லிப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

புது தில்லியின் மஜ்பூரில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் கற்களை எடுத்து வீசியதில் தலைமைக் காவலர் ரத்தன்லால் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலாக்பூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ரத்தன்லால் மரணம் அடைந்ததை அடுத்து, தில்லியின் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, புது தில்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது தொடர்பான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

புது தில்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மீண்டும் அமைதியைக் கொண்டு வருமாறு தில்லி ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் கேஜரிவால் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியதால்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும்  போராட்டக்காரர்களை கலைத்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத்தில் இருந்து ஆக்ரா சென்றுவிட்டு இன்று மாலை புது தில்லி வரவிருக்கும் நிலையில், தலைநகரில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.