தில்லியில் வன்முறை ஏற்பட்ட இடங்களில் துணைநிலை ஆளுநர் ஆய்வு
வடகிழக்கு தில்லியில் வன்முறை ஏற்பட்ட இடங்களில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு தில்லியில் வன்முறை ஏற்பட்ட இடங்களில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிா்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில், இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.
வன்முறை பாதித்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 106 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை தொடா்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை தில்லி காவல்துறை அமைத்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட்டு வடகிழக்கு தில்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் வன்முறை ஏற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறிப்பாக வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மௌஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், போராட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, அதிகாரிகளுடன் வந்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.