முகப்பு
இந்தியா

தில்லி வன்முறையில் வீடிழந்த வீரருக்கு திருமணப் பரிசாக வீடு கட்டித் தரும் பிஎஸ்எஃப்

தில்லி வன்முறையின் போது வீட்டை இழந்த வீரருக்கு அவரது திருமணப் பரிசாக புதிய வீடு கட்டித்தர பிஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:02 PM
பகிர்:


புது தில்லி: தில்லி வன்முறையின் போது வீட்டை இழந்த வீரருக்கு அவரது திருமணப் பரிசாக புதிய வீடு கட்டித்தர பிஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மொஹம்மது அனீஸின் வீடு, வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையின் போது தீக்கிரையானது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே ராதாபரி என்ற இடத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் பிஎஸ்எஃப் வீரர் மொஹம்மது அனீஸ்(29). விரைவில் அவர் தில்லிக்கு பணியிட மாற்றம் பெற்று, தனது குடும்பத்துடன் இணைய விருக்கிறார். அவருக்கு திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறினார்.

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் 42 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், வன்முறைக்கு உள்ளான கஜௌரி காஸ் பகுதியில் அனீஸின் பெற்றோர் வசித்து வந்த வீடும் சேதமடைந்தது. அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர்.

இந்த நிலையில், பிஎஸ்எஃப் நலவாரிய நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவிட்டு, மொஹம்மது அனீஸுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில், அதற்கு முன்பே அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருமணப் பரிசாக இந்த வீட்டை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு பிஎஸ்எஃப் பொது மேலாளர் வி.கே. ஜோஹ்ரி உத்தரவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →