பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் 26 ரயில்கள் தாமதம்
தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் 26 தில்லி ரயில்கள் தாமதமாகியுள்ளன.
தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் தில்லிக்குச் செல்லும் 26 ரயில்கள் கால தாமதமாகின.
தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பகல் நேரங்களிலும் விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இன்று பனிமூட்டம் காரணமாக தில்லிக்குச் செல்லும் 26 ரயில்கள் கால தாமதம் ஆனதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரக்சால்-ஆனந்த் விஹார் சத்பவானா எக்ஸ்பிரஸ் 5 மணி நேரமும், அதைத் தொடர்ந்து பாகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் 4 மணி நேரமும் கால தாமதம் ஆகிறது.
கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 3 மணி 15 நிமிடங்கள் தாமதமானது. புரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், மும்பை-அமிர்தசரஸ் தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் பாந்த்ரா-தில்லி சராய் ரோஹிலா கரிபிரத் ஆகிய ரயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாகின.
ராஜேந்தா நகர்-புது தில்லி சம்பூர்ணா கிரந்தி எக்ஸ்பிரஸ், ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் மகாகவுஷல் எக்ஸ்பிரஸ் இரண்டரை மணி நேரங்கள் தாமதமானது. இதேபோன்று நேற்றும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலப் பகுதிகளில் இருந்து தில்லிக்குச் சென்ற 23 ரயில்கள் தாமதமாகின.