முகப்பு
இந்தியா

பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியைப் புத்திசாலித்தனமாக மீட்ட ராணுவ வீரர்கள்

வடக்கு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ உதவிக் குழுவினர், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை இடுப்பளவு மூடிய பனியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:30 PM
பகிர்:


ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ உதவிக் குழுவினர், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை இடுப்பளவு மூடிய பனியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ராணுவத்தினரின் உதவியால், உரிய நேரத்துக்கு பாரமுல்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அங்கு சுகப்பிரசவம் நடந்தது. அழகான குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

செவ்வாய்க்கிழமை ராணுவ உதவிக் குழுவினருக்கு, கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும், சாலையில் மூடியிருக்கும் பனியால் அவரை வெளியே அழைத்துவர முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர்.

பிரசவ வலி கடுமையாகி, தாய் மற்றும் கருவில் இருந்த குழந்தை என இருவரின் உயிருக்குமே ஆபத்து ஏற்பட்டதால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கும்  பணியில் இறங்கிய ராணுவத்தினர் மூன்று குழுக்களாகப் பிரிந்தனர். கர்ப்பிணியின் வீட்டு வாசல் முதல் ஹெலிபேட் வரை சாலையில் இருந்த பனியை அப்புறப்படுத்துவது, கர்ப்பிணியை தோளில் தூக்கிக் கொண்டு ஹெலிபேட் கொண்டு வருவது, போக்குவரத்தை சீர் செய்வது உள்ளிட்ட பணிகளில் சுமார் 100 ராணுவத்தினரும், 25 பொதுமக்களும் ஈடுபட்டனர்.

ராணுவத்தினரின் உதவியால், ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் பாரமுல்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு அங்கு சுகப் பிரசவமாகி, குடும்பத்தாரிடம் குழந்தையை ஒப்படைக்கும் வரை அவர்களுடன் ராணுவ வீரர்கள் உறுதுணையாக இருந்தனர்.

ஒவ்வொரு பணியையும், தங்களுக்குள் குழு அமைத்து வெற்றிகரமாக செய்த வீரர்களின் திட்டம் நன்றாகவே பலனளித்ததாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ராணுவ உதவிக் குழுவினர் தங்களது செல்போன் எண்களை கிராம மக்களுக்கு வழங்கி, எந்தவிதமான அவசர உதவி தேவைப்பட்டாலும் அழைப்பு விடுக்குமாறு அறிவுறுத்தினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →