5 நாட்களுக்குப் பின் மீண்டும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததையடுத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஐந்து நாட்களாக மூடப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரானதால் இன்று நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்தன. முதலில் ஜம்முவில் சிக்கியுள்ள வாகனங்களை ஸ்ரீநகருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வாகனங்களை அனுமதித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்களை முதலில் சரிசெய்த பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் முசாபர் அகமது தெரிவித்துள்ளார். இந்தாண்டு, மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலமுறை தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும், ஜம்முவிலிருந்து 150 கி.மீ தொலையில் உள்ள டிக்டோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை காஷ்மீர் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலை இணைப்பு என்பதால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சரியான நேரத்திற்குக் கொண்டுச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமங்களுக்குள்ளானது. ஸ்ரீநகரில் தொடர்ந்து பூஜ்ஜியத்திற்குக் கீழ் மைனஸ் 1 டிகிரியாக இருந்தது. சாலையின் பல இடங்களில் பனி உறைந்து பனிக்கட்டிகளாகக் காட்சியளித்தது. இது பாதசாரிகளுக்கிடையே மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியது.